தமிழ்நாடு
எடப்பாடிக்கு பாஜக மேல் பயம்: தங்கதமிழ்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு!
சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே விடுதலைப் புலிகளை அழிக்க அப்போது இருந்த இந்திய அரசு உதவியதாக கூறினார். இதனை கையிலெடுத்த தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு காங்கிரஸ், திமுக கூட்டணியை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.
ஈழ தமிழர்களை கொல்ல இலங்கைக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி உதவியதாக கூறி மாவட்டந்தோறும் பொதுக்கூட்டம் நடத்தியது அதிமுக. இந்நிலையில் இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்க பாஜகவும் உதவியுள்ளது. அவர்களை எதிர்க்க எடப்பாடிக்கு பயம் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனியில் செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன், ஒரு முக்கியமான குற்றச்சாட்டை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்த போது இலங்கையில் வீரவணக்கம் கூட்டம் நடைபெற்றது. அதில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசியபோது, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு இராணுவ தளவாடங்களை வழங்கியதால் தான் விடுதலை புலிகளை அழித்து இருப்பதாக கூறி அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்துளார்.
ஆனால் இந்த அரசு திமுகவையும், காங்கிரஸ்சையும் எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்களே, ஏன் அதே விடுதலை புலிகளை அழிக்க துணை போன பாஜகவை மட்டும் எதிர்த்து கூட்டம் நடத்தவில்லை. எடப்பாடிக்கு பாஜக மேல் பயம் இருக்கிறது என்றார்.