வணிகம்
அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 11 சதவீதமாக உயரும்!
2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 11 சதவீத வளர்ச்சியைப் பெறும் என்று பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். அதன் முன்னோட்டமாக இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையை முதன்மை பொருளாராதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வெங்கட்ட சுப்பிரமணியன் தலைமையிலான குழு வெளியிட்டது. அதில் இந்தியாவின் வளர்ச்சிக்கான பல்வேறு பொருளாதார ஆலோசனைகளை வழங்கப்பட்டு இருந்தன.
அதில், “பெருந்தொற்று காலத்தில் நீண்ட கால ஆதாயத்திற்கான குறுகிய கால வலியாக, மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதில் இந்திய அரசு கவனம் செலுத்தியது.
ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து இந்தியா மீண்டு வரும். ஆனால் இறந்தவர்களை மீட்க முடியாது. ஆனால் கோவிட்-19 தொற்று பரவுவதையும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் இந்திய அரசு சிறபபக செயல்பட்டுள்ளது.
2020 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியவின் ஜிடிபி 7.7 சதவீதமாக இருக்கும். பொருந்தொற்று மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களால் பலர் வேலை இழந்தனர். பொருளாதாரமும் சரிந்தது. ஏப்ரல்-ஜூன் ஊரடங்கு காலத்தில் ஜிடிபி 23.9 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 7.5 சதவீதமும் எதிர்மறை வளர்ச்சியாக அமைந்தது.”
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவில், மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் ‘V’ வடிவில் மீண்டும் உயரும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பெருந்தொற்று காலத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கையால் சுமார் 37 லட்சம் நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து காப்பற்றப்பட்டுள்ளனர், 1 லட்சம் இறப்புகள் தவிற்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.