தமிழ்நாடு
அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்வரை சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம்: தேர்தல் ஆணையம்
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஆராய்ந்து அதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை நிராகரிப்பார்கள். எந்த தவறும் இல்லாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமானால் அதனை ஏற்றுக்கொள்வார்கள். இந்த வேட்புமனு பரிசீலனைக்கு பின்னர் தேர்தல் அதிகாரிகள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு போட்டியிடும் சின்னத்தை ஒதுக்குவது வழக்கம்.
ஆனால் தற்போது இதனை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வேறுஒரு சின்னத்தை அவர்களுக்கு பொதுவாக ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது. மேலும் அவர்கள் பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள் என கூறப்பட்டது.
இதனையடுத்து டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் நேற்று வேறொரு பொதுச்சின்னத்தை ஒதுக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க இருப்பதால் தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதில், அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்வரை சுயேச்சைகளுக்கு தற்போதைக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.