உலகம்
கொரோனாவை விட ஆபத்தான எபொலா வைரஸ்: மீண்டும் பரவுவதால் பரபரப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனாவை விட ஆபத்தான எபொலா வைரஸ் மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியா என்ற நாட்டில் எபொலா வைரஸ் தற்போது அபாயகரமாக பரவி வருகிறது. காட்டு வவ்வால் மூலம் பரவத் தொடங்கிய இந்த எபொலா கிருமி கடந்த 2015ஆம் ஆண்டு மனிதர்களுக்கும் பரவியதை அடுத்து கினியா நாட்டில் 2500 பேருக்கு மேல் இந்த வைரஸால் பலியாகினர். அதுமட்டுமின்றி அண்டை நாடுகளான லைபீரியா, சியாரா லியோன் நாடுகளுக்கும் பரவியது.
கடந்த 2016 வரை இந்த எபொலா வைரஸால் 11 ஆயிரத்து 300 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தடுப்பூசி மூலம் தடுத்து நிறுத்தப்பட்ட எபொலா வைரஸ் தற்போது மீண்டும் கினியா நாட்டில் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கினியா நாட்டில் அடுத்தடுத்து நான்கு பேர் மர்மமான முறையில் பலியானதை அடுத்து அவர்களுடைய ரத்த மாதிரிகள் சோதனையிடப்பட்டதில் அவர்கள் எபொலா பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எபொலா வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் எபொலா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக சுகாதார மையம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.