தமிழ்நாடு
செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு: மின்சார வாரியம் உத்தரவு!
இதுவரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மின்சார வாரிய ஊழியர்கள் மின் கணக்கீடு பணியை செய்து வந்த நிலையில் தற்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே செல்போன் செயலி மூலம் மின் கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
செல்போன் செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீடு செய்ய கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே. செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதனை முறைகள் தொடங்க மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், செல்போன் செயலியை கைபேசியில் டவுன்லோட் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் என்றும் செல்போன் செயலியில் மின் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது மற்றும் குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு செல்போன் செயலிகள் வழங்கப்பட்டு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முயற்சிக்கு பலன் அளித்தால் தமிழகம் முழுவதும் இனி செல்போன் செயலி மூலமே மின்கட்டணம் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.