தமிழ்நாடு
பிரதமர் இவர்களை மதிக்கவில்லை: துரைமுருகன் விளாசல்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரண நிதியை இதுவரை மத்திய அரசு அறிவிக்காததால் திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கேரள முதல்வருக்கு பயப்படும் பிரதமர் மோடி தமிழக ஆட்சியாளர்களை மதிக்கக் கூட இல்லை என கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், கேரளத்தில் வெள்ளம் வந்தபோது பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தார், பணத்தை அள்ளிக் கொடுத்தார். கம்யூனிஸ்ட் முதல்வரிடம் கூட பிரதமருக்குப் பயம் இருக்கிறது. தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரதமர் இங்கு வரவுமில்லை, பணம் தரவுமில்லை.
அப்படியென்றால் பிரதமர் இவர்களையும் மதிக்கவில்லை, இந்த ஆட்சியையும் மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். பாஜகவுக்கு எதிராகத்தான் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் என்றும் தெரிவித்தார் துரைமுருகன்.