தமிழ்நாடு
கொடுக்குறாயா? இல்லையா?: முதல்வரின் வீரத்தை நாளை பார்ப்போம்!
கடந்த முறை ஓகி புயலின் போது தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகையை சரியாக வழங்காமல் மிக குறைந்த நிவாரணத்தையே வழங்கியது. அதற்குள் அடுத்த புயலாக கஜா புயல் தமிழகத்தை தாக்கியுள்ளது. இதனால் பலத்த சேதம் அடைந்துள்ளது நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்கள்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான நிவாரண நிதியை பெற டெல்லி செல்ல உள்ளார். இந்த சூழலில் திமுக சார்பில் நிவாரணமாக ஒரு கோடி ரூபாயை திமுக பொருளாளர் துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வழங்கியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், போன புயலுக்கே மத்திய அரசின் நிவாரணம் முழுமையாக கிடைக்காத நிலையில் இந்த முறை டெல்லி சென்று எடப்பாடி பழனிச்சாமி மோடியை சந்தித்து நிதியை பெற்றுவிடுவாரா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், கேட்கிற விதத்தில் கேட்டால் மத்திய அரசிடமிருந்து நிதி வரும். கேட்கும் பொழுது அதிகாரம் இருக்கவேண்டும், தைரியம் இருக்க வேண்டும், கொடுக்குறாயா? இல்லையா? என கேட்க வேண்டும். நெளிவு சுழிவு காட்டினால் மத்திய அரசாங்கம் பணியாது. அந்த வீரம் இருக்கிறதா முதலமைச்சருக்கு என்று நாளை பார்ப்போம் என்றார்.