தமிழ்நாடு
டி.ஆர்.பாலு உள்ளே, துரைமுருகன் வெளியே: கொரோனா படுத்தும் பாடு!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக பொருளாளர் டிஆர் பாலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகளையும் குறிவைத்து தாக்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல அரசியல்வாதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரைமுருகன் கொரோனாவில் குணமானார் என மருத்துவமனை அறிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் திமுக பொருளாளர் டிஆர் பாலு அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பிரமுகர்களுக்கு மாறி மாறி கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது அக்கட்சியின் தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.