தமிழ்நாடு
2 மணி நேரத்தில் கனமழை: இந்த வாரத்தில் மீண்டும் வெள்ள அபாயம்: வானிலை எச்சரிக்கை!
![rain9 - Bhoomitoday rain](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/rain9.jpg)
இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அதேபோல் இந்த வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, ஆகிய ஆறு மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தெற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் சனிக்கிழமை வரை அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் இதனால் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும் அதேபோல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.