இந்தியா
அறுவை சிகிச்சை செய்து 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய முதலமைச்சர்: குவியும் பாராட்டுக்கள்!
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
திரிஉரா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்று கொண்டவர் மாணிக் சஹா. இவர் முதலமைச்சராகவும் அரசியல்வாதியாகவும் இருப்பதற்கு முன்னர் 20 வருடங்கள் மருத்துவராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிபுரா மருத்துவ கல்லூரியில் வாய் வழி மற்றும் மார்க்ஸிலோபேசியல் என்ற துறையின் அறுவை சிகிச்சை நிபுணராக 20 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். இதனை அடுத்து அவரது வாழ்க்கை திசை மாறி அரசியல்வாதி மற்றும் முதலமைச்சர் என்று மாறிவிட்டது.
இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு வாயில் உள்ள நீர் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ள நிலையில் இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சர் மாணிக் சஹா தான் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. இதனை அவரிடம் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியுடன் வருகிறேன் என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து நேற்று காலை 9 மணிக்கு மருத்துவமனை சென்ற முதலமைச்சர் மாணிக் சஹா, உடனடியாக மருத்துவர் குழு உதவியுடன் 10 வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்தார். அரைமணி நேரத்தில் அவர் இந்த அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
10 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக இன்று காலை நான் எந்த விதமான அரசியல் பணிகளிலும் ஈடுபடாமல் நேராக அறுவை சிகிச்சை அரங்கிற்கு வந்தேன். இங்கு அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. சிறுவன் தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் பணிபுரிந்த இடத்தில் மீண்டும் சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துள்ளேன். எனக்கு இதனால் எந்த சிரமமும் இல்லை, மாறாக எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பணியையும் விட்டுவிட்டு ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதலமைச்சர் மாணிக் சஹாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.