இந்தியா
இதை செய்தால் பட்டம் திரும்பப்பெறப்படும்: பல்கலை எச்சரிக்கை
கேரளாவில் உள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகம் வரதட்சினை வாங்கினால் பட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வரதட்சணை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் மற்றும் கொலை செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதாகவும் பல பெண்கள் வரதட்சணை காரணமாகவே திருமணமாகாமல் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கேரள அரசு வரதட்சணைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் வரதட்சனை கொடுமை அங்கு தலைவிரித்தாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கோழிக்கோடு பல்கலைக்கழகம் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் பட்டம் பெறும் மாணவர்கள் வரதட்சனை வாங்க மாட்டேன் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அவ்வாறு கையெழுத்திட்ட பின்னர் தான் மாணவர்களுக்கு பட்டப் படிப்பிற்கான பட்டம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பட்டம் வாங்கிய பின்னர் எதிர்காலத்தில் திருமணம் செய்யும்போது வரதட்சினை வாங்கினால் அந்த மாணவரின் பட்டம் பறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால்தான் பொதுமக்கள் மத்தியில் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படும் என்றும் கேரளாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.