உலகம்
அவசரப்பட்டு AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யாதீர்கள்.. ‘இன்டர்நெட்டின் தந்தை’ எச்சரிக்கை..!
ஒவ்வொரு காலத்திலும் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம் மக்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது அனைவரது கவனமும் ஏஐ என்று கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆதரவுடன் இயங்கும் ChatGPT என்ற தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை அடுத்து கூகுள் நிறுவனமும் பார்ட் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து வேறு சில நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவசரப்பட்டு யாரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என இன்டர்நெட்டின் தந்தை என்று கூறப்படும் Vint Cerf அவர்கள் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ChatGPT மற்றும் கூகுளின் பார்ட் ஆகியவைகளில் நெறிமுறை சிக்கல் உள்ளது. இவை எப்போதும் நாம் விரும்பும் வழியில் செயல்படாது, எனவே அவசரப்பட்டு முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பல தவறுகள் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தவறுகள் ஒரு கட்டத்தில் சரி செய்த பின்னர் அதன் பிறகு பொறுமையாக முதலீடு செய்யலாம் என்றும் இப்போது முதலீடு செய்ய அவசரப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் அருமையாக இருந்தாலும் அது எப்போதும் சரியாக வேலை செய்யாது என்றும் அதில் ஏற்படும் தவறுகள் கண்டிப்பாக திருத்தப்பட வேண்டும் என்றும் அதுவரை முதலீட்டாளர்கள் பொறுமையாக வேண்டும் என்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆய்வு செய்யும் பலர் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் என பலர் முடிவு செய்து அதில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கும் நிலையில் இன்டர்நெட்டின் தந்தையின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.