தமிழ்நாடு
என்னைக் கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் அதிரடி!
சில தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கூறினார். இது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பாஜகவினர் இதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றினர். கமல் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவரது கூட்டத்தில் செருப்பு வீசி பதற்றத்தை உருவாக்கினர். கமலின் கருத்துக்கு பிரதமர் மோடி கூட பதிலடி கொடுத்தார். அந்த அளவுக்கு அதன் வீச்சு இருந்தது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்.
அப்போது, நாதுராம் கோட்சே குறித்து நான் கூறியதில் தவறில்லை. எனது பேச்சால் சமூகப் பதற்றம் உருவாகவில்லை, அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைக்காக நான் அஞ்சவில்லை. பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முன் ஜாமீன் கோரினேன்.
என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். என்னைக் கைது செய்யாமல் இருப்பது நல்லது. இது என்னுடைய வேண்டுகோள் இல்லை. அறிவுரை. பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும். தீவிரவாதம் எல்லா மதத்திலும் இருக்கிறது என்றார் கமல்.
மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியது, அவரது குணாதிசயத்தைக் காட்டுகிறது என்று தெரிவித்தார் கமல்.