தமிழ்நாடு
ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் உள்ளிட்ட சாதனங்கள் மூலமாக சிறிய திரையில் படிக்கும் மாணவர்களின் கண்பார்வை மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் உரிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மொபைல் போன்ற சிறிய திரையில் இளம் பருவத்தினர் அதிக நேரம் பார்க்கும்போது அவற்றில் இருந்து வெளியாகும் புளூலைட் குழந்தைகளின் விழித்திரையை நேரடியாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றை தவிர்ப் பதற்காக முடிந்தவரையில் கைபேசியை தொலைக்காட்சியுடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம் என்றும் அல்லது லேப்டாப் போன்ற பெரியதாக இருந்தால் நல்லது என மருத்துவர்கள் யோசனை தெரிவித்த்துள்ளனர்.
தொடர்ந்து திரையை பார்ப்பதால் குழந்தைகளின் பார்வை திறன் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல குழந்தைகள் அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் ஒற்றை தலைவலி, காதுகளில் இரைச்சல், காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறும் மருத்துவர்கள், தொடர்ந்து பல மணி நேரம் அதிக சப்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் காது நரம்புகள் பலவீனமடைந்து கேட்கும் திறன் நாளடைவில் குறையும் என்றும் எச்சரிக்கின்றனர். இயர்போன்களை வைப்பதால் காற்று காதுகளின் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு காதில் பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க 60 சதவிகிதம் வரை ஒலி திறனை பயன்படுத்தலாம் எனவும் தொடர்ச்சியாக 45 நிமிடங்களுக்கு மேல் இயர்போன்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். அல்லது இயர்போன்களுக்கு பதிலாக பெரிய அளவிலான ஹெட்போனை பயன்படுத்தலாம் எனவும் அவை நல்ல தரமானதாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்கமுடியாதது என்றாலும் வளரும் இளம் தலைமுறையினரின் கண்கள், செவிகள் ஆகியவை மென்மையாக இருக்கும் என்பதனால் பெற்றோர்கள் மிகுந்த கவனத்தோடு அவற்றை கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.