தமிழ்நாடு
விஜய் படத்தை போட்டு காட்டி 10 வயது சிறுவனுக்கு சிகிச்சை: சென்னையில் ருசிகர சம்பவம்!
10 வயது சிறுவனுக்கு விஜய் படத்தை போட்டு காட்டி வலிக்காமல் சிகிச்சை செய்த டாக்டர்கள் குறித்த ருசிகர சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது
சென்னை அண்ணா சாலையில் நேற்று 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் உட்கார்ந்திருந்த சசிவர்ஷன் தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை உடனடியாக சிகிச்சை செய்ய முடிவெடுத்த டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கான ஊசியை செலுத்தி முயன்றனர்
ஆனால் ஊசி என்றால் தனக்கு பயம் என்றும் ஊசி வேண்டாம் என்றும் அழுதவாறு அந்த சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். அப்போது அங்கு வந்த தன்னார்வலர் ஒருவர் சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தபோது, சசிவர்ஷன் ஒரு தீவிரமான விஜய் ரசிகன் என்பதை தெரிந்து கொண்டார்
இதனையடுத்து அவர் தனது மொபைல் மொபைல் போனில் இருந்த விஜய் நடித்த பிகில் படத்தை காண்பித்தார். அந்த சிறுவன் உற்சாக மிகுதியில் பிகில் படத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்கும் ஊசியை டாக்டர்கள் செலுத்தினர். அதன்பிறகு காயமேற்பட்ட பகுதியில் தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். அந்த சிறுவனும் விஜய் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைக்கு ஒத்துழைத்தார்.
தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகரான சசிவர்ஷன் பிகில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.