தமிழ்நாடு
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற டாக்டர் கைது!
கொரனோ வைரசால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து செலுத்த வேண்டும் என்ற வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது என்றும் 30 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படும் என்றும் இந்த மருந்தை அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய கூடாது என்றும் தனியார் மருத்துவமனைக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்த நிலையிலிருந்து ரெம்டெசிவிர் தேவையை கணக்கில் கொண்டு ஒரு சிலர் அதை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் தாம்பரம் அருகே ரெம்டெசிவிர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது முகமது இம்ரான் கான் என்ற டாக்டர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ரெம்டெசிவிர் மருந்தை அவர் 20,000 ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்க முயன்றதும், அதற்கு உடந்தையாக விஜய், ராஜ்குமார் ஆகியோர் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தற்போது மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் முகமது இம்ரான் கான் என்பவர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவரே ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.