பர்சனல் ஃபினான்ஸ்
பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டத்தினைப் பிரதமர் மோடி பெண் குழந்தைகளின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்தார். செல்வ மகள் திட்டத்தினை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் குறிப்பிட்ட சில வணிக வங்கிகளிலும் தொடங்கலாம்.
தற்போது செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 8.10 சதவீத லாபம் அளிக்கப்படும் நிலையில் 2018 அக்டோபர் 1 முதல் 2018 டிசம்பர் 31 வரை 8.50 சதவீத லாபம் அளிக்கப்பட உள்ளது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செல்வ மகள் திட்டம் குறித்து இங்கு மேலும் விளக்கமாகப் பார்க்கலாம்.
- செல்வ மகள் திட்டத்தினைப் பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர்களால் தொடங்க முடியும்.
- ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு செல்வ மகள் சேமிப்பு கணக்கு எனப் பெற்றோர்களால் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் மீது மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
- செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தினைப் பெண் குழந்தை பிறந்த தேதியில் இருந்து 10 வயது வரைக்குள் மட்டுமே திறக்க முடியும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்குக் குறைந்தது 250 முதல் 1,50,000 ரூபாய் வரை 15 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம்.
- பெண் குழந்தையின் வயது 21 வயது நிரம்பும் போது செல்வ மகள் சேமிப்பு கணக்கு முதிர்வடையும். கணக்கு முதிர்வடைந்த பின்பு வட்டி தொகையுடன் முழுப் பணத்தினையும் திரும்பப் பெற முடியும். கணக்கு முதிர்வடைந்த பிறகு வட்டி அளிக்கப்படாது.
- ஒரு வேலை முதலீடு செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு 18 வயது நிரம்பிய உடன் திருமணம் நடைபெற்றால் அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து மொத்த பந்தினையும் எடுத்துக்கொள்ளலாம்.
- பெண் குழந்தை 10-ம் வகுப்பு முடித்த பிறகு அல்லது 18 வயது நிரம்பிய பிறகு மேல் படிப்பு படிக்க முதலீடு செய்த தொகையில் 50 சதவீதத்தினைப் பெற முடியும். முதிர்வு காலத்திற்குப் பின்பு அந்தப் பெண் குழந்தையால் மட்டுமே பணத்தினைப் பெற முடியும்.
- செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் முழுமையாக வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.