தமிழ்நாடு
திமுகவை இரண்டாக பிரித்துவிடுவோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை!
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் திமுகவை நாங்கள் இரண்டாக பிரித்துவிடுவோம் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடகத்தில் நடந்தது போல தமிழகத்திலும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆட்சியை திமுக கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. தானாகவே கவிழப் போகிறது என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறார் ஸ்டாலின்.
இந்நிலையில் நேற்று விருதநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பேசிவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தின் உரிமைகளைப் பற்றிப் பேச திமுகவுக்கோ அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ அருகதை கிடையாது.
அதிமுக மக்கள் விரும்பக் கூடிய போற்றக்கூடிய கட்சி. கர்நாடகத்தில் ஆட்சியைக் கலைத்தது போல தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சியை ஸ்டாலின் கவிழ்க்க நினைத்தால் திமுகவை நாங்கள் இரண்டாக பிரித்துவிடுவோம் என அதிரடியாக பதில் அளித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.