தமிழ்நாடு
தேமுதிக அடைந்த பாதிப்பை இனி திமுகவும் வைகோவால் பெறும்: எல்.கே.சுதீஷ் அதிரடி!
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி என்ற ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தால் டெப்பாசிட் கூட பெற முடியவில்லை.
இந்த தேர்தல் தேமுதிகவுக்கு மிகப்பெரிய சறுக்கலாக அமைந்தது. இந்நிலையில் தற்போது தேமுதிக அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளது. இதனையடுத்து மக்கள் நல கூட்டணியை ஒருங்கிணைத்த வைகோ எதிர் கூட்டணியான திமுக கூட்டணியில் உள்ளார்.
இந்த சூழ்நிலையில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளரான எல்.கே.சுதீஷ் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் தோன்றி சட்டப்பேரவை எதிர்க்கட்சியாக வரை வளர்ந்த தேமுதிகவால் கடந்த தேர்தலில் ஒரு தொகுதி கூட பெற முடியவில்லையே? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சுதீஷ், அதிமுக, திமுகவிற்கு மாற்றாக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட கேப்டன் அமைத்த மக்கள் நலக் கூட்டணியில் சிலகட்சிகளின் தவறான நடவடிக்கைகளே இதற்கான காரணம். குறிப்பாகவை கோவின் தவறான அறிக்கைகள், அவர் கோவில்பட்டியில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது போன்ற நடவடிக்கைகளே காரணம்.
இந்த நடவடிக்கைகளை ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியிலும் வைகோ செயல்படுத்தி அந்த கூட்டணியை தோல்வியடைய செய்து, பின்னர் அங்கிருந்து வெளியே வருவார். நாங்கள் மக்கள்நலக் கூட்டணியில் அடைந்த பாதிப்பை இனி திமுகவும் வைகோவால் பெறும் என்றார் அதிரடியாக.