தமிழ்நாடு
பாராளுமன்ற வளாகத்தில் கருணாநிதியின் உருவச்சிலை: திமுக எம்பி மக்களவையில் குரல்!
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு பாராளுமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என திமுக தர்மபுரி எம்பி மக்களவையில் பேசியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி இந்தியாவின் மூத்த, பழுத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அரசியலில் அவர் செய்த சாதனைகளை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்ததில்லை. தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் நிறைய செய்துள்ளார் கலைஞர் கருணாநிதி. பல பிரதமர்களையும் உருவாக்கியுள்ளார் இவர். காங்கிரஸ், பாஜக என இரண்டு அரசுகளும் மத்தியில் அமைவதற்கும் கலைஞர் கருணாநிதி காரணமாக இருந்திருக்கிறார்.
இந்தியா முழுமைக்கும் அறியப்பெற்ற ஒரு அரசியல் தலைவர் அவர். இந்நிலையில் மறைந்த அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலையை நிறுவ மத்திய அரசு உடனடியாக முன்வரவேண்டும் எனவும் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார் தர்மபுரி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமார்.