தமிழ்நாடு
பாமக பக்கம் சாயும் திமுக… கூட்டணியில் சலசலப்பு..! – திருமாவளவன் சொன்ன அதிரடி பதில்
திமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இது குறித்து திமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் பாமகவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல். இப்படி பாமக, திமுக கூட்டணியில் இடம் பெற்றால் தாங்கள் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்போம் என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ‘வன்னியர்களுக்கு 20 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக உறுதியான உத்தரவாதம் கொடுத்தால், அவர்களுடன் கூட்டணி வைப்பது குறித்து மருத்துவர் ராமதாஸ் பரிசீலிப்பார்’ என்று பகீர் கருத்தைக் கூறினார்.
பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில், அவரின் இந்தக் கருத்து தமிழக அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி திருமாவளவன், ‘யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து திமுகதான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்களின் சுதந்திரம். அதே நேரத்தில் பாஜக மற்றும் பாமக இருக்கும் அணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம் என்பது எங்களது நிலைப்பாடு. அவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள். மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் மக்களைப் பிளவு படுத்துபவர்கள். எனவே அவர்களோடு எந்த உறவும் வைத்துக் கொள்ள முடியாது’ என்று திட்ட வட்டமாக கூறியுள்ளார்.