தமிழ்நாடு
சென்னையில் கனிமொழி எம்பி இன்று போராட்டம்: காரணம் இதுதான்!
சென்னையில் திமுக எம்பி கனிமொழி இன்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன் ஆகியோர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது தமிழக அரசு சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையா? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தன. இந்த நிலையில் ஏற்கனவே இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து இருந்த திமுக எம்பி கனிமொழி அவர்கள் இன்று சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் மற்றும் எஸ்பி கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இன்று மாலை 3 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி உள்பட மகளிரணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.