தமிழ்நாடு
திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!
திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் கொரோனா பரவி வருவதாக வெளிவந்த செய்தியை அவ்வப்போது பார்த்தோம்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு திரட்டுவதற்காக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து கொண்டிருந்த திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா ஏற்பட்டு இருப்பதால் தற்போது அவர் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் இன்று மதியம் அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனை அடுத்து கனிமொழி இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றும் அவருடைய பிரச்சார திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி வரும் தேர்தலில் வாக்களிப்பாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.