தமிழ்நாடு
இந்த ஆட்சியை கலைக்க அமமுக திமுகவுடன் இணையலாம்: வரவேற்கும் டிகேஎஸ் இளங்கோவன்!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சியை கலைக்க
அமமுக உடன் திமுக இணைந்தால் தான் முடியும் என அமமுக முக்கியத்
தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில்
முக்கிய பேசும் பொருளாக மாறிவிட்டது.
தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஓரு இடத்தில் கூட வெற்றி பெறாது. 22
தொகுதிகளிலும் அமமுகதான் வெற்றிபெறப் போகிறது. அதன்பிறகு
ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரும்போது திமுகவுடன்
சேர்ந்துதான் ஆட்சியைக் கலைக்க முடியும் என தங்க தமிழ்ச்செல்வன்
நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் தங்க
தமிழ்ச்செல்வனின் இந்த கருத்துக்கு அதிமுக முக்கிய தலைவர்கள் தங்கள்
எதிர்விணையை ஆற்றி வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் என
அதிமுகவினர் அமமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். திமுக
உடன் அமமுக ரகசிய கூட்டணி வைத்துள்ளது தங்க தமிழ்ச்செல்வன் மூலம்
வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் 21 கட்சிகள் இணைந்துள்ளது போல, அதிமுகவுக்கு எதிராக எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் இணையலாம். அதில் அமமுகவும் இணையலாம். அதிமுக ஆட்சிக்கு எதிரானவர்கள் என்றால் ஆட்சிக் கலைப்புக்காக திமுகவுடன் இணையலாம் என்றார்.