தமிழ்நாடு
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை: டிசம்பர் 16-இல் திறப்பு!
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ம் தேதி முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ள என திமுக தலைமை அறிவித்துள்ளது.
கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். இதனையடுத்து அவரது நினைவாக 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படும் என்று கூறப்பட்டது. இந்த சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்றபோது கடந்த செப்டம்பர் 11-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் சிலையை நேரில் சென்று பார்வையிட்டு சில திருத்தங்களை கூறினார்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 16-ம் தேதி கலைஞர் கருணாநிதியின் சிலை நிறுவப்படவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் தமிழினத் தலைவர் கலைஞரின் சிலையை வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி, அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்பாக திறந்து வைக்கவுள்ளனர். ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்துக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை, நிறைவேற்றித் தந்து, தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் உள்ளங்களில் கொலுவீற்றிருக்கும் கலைஞரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ளது. அதன்படி டிசம்பர் 16-ம் தேதி கலைஞர் சிலையும், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் ஒரே இடத்தில் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.