தமிழ்நாடு
திமுக கட்சியல்ல அது ஒரு கம்பெனி: முதல்வர் பழனிச்சாமி விளாசல்!
இலங்கை போரின் போது இலங்கைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி உதவி செய்ததாக கூறி ஆளும் கட்சியான அதிமுக நேற்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக சேலத்தில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு திமுகவை விமர்சித்தார்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவிகள் செய்ததாகப் பேட்டியளித்திருந்தார். இதனையடுத்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் அதிமுக அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டனர்.
அப்போது சேலத்தில் பேசிய முதல்வர், திமுகவை விமர்சித்தார். ஸ்டாலின், தமிழக அரசு தவறு செய்வதுபோல தோற்றமளிக்கிற செய்தியை சொல்கிறார். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறபோது மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடும். அதை நிவர்த்தி செய்வதற்கும் இந்தப் பொதுக்கூட்டம் பயன்படுகிறது.
செயல்பட முடியாத தலைவருக்கு, தலைவர் என்ற பட்டத்தை அளித்துள்ளனர். திமுக கட்சியல்ல, அது ஒரு கம்பெனி. வாரிசுகள் மட்டும்தான் அங்கு பதவிக்கு வர முடியும். அதிமுகவில் கட்சிக்கு விசுவாசமாக யார் உழைத்தாலும் பதவிக்கு வர முடியும். இது ஜனநாயகக் கட்சி என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.