தமிழ்நாடு
கோமாளித்தனமான விடியா அரசு தான் திமுக: இபிஎஸ் கடும் தாக்கு!
![Polish_20230516_220701122 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/05/Polish_20230516_220701122.jpg)
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கள்ளச் சாராயம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து, பல பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இதற்கு காரணமானவர் என திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர், திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்பவரின் தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்ட அம்மாவாசை, தானும் கள்ளச் சாராயத்தை குடித்ததால் கூறி, மருத்துவமனையில் அனுமதித்து கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
இந்த நிலையில் போலி மதுபான வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு இந்த விடியா அரசு, கள்ளச் சாராயத்தால் பாதிக்கபட்டவருக்கு அளிக்கப்படும் ரூ.50,000-ஐ நிவாரணமாக வழங்கி இருக்கிறது. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சியா? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒருவர் தன்னை மாற்றுத் திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என பொய் சொல்லி தமிழ்நாடு முதல்வரை சந்தித்து பரிசினைப் பெற்று செல்கிறார். இப்போது என்னவென்றால், கள்ளச் சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவர்க்கு கூட அவரின் செயலை பாராட்டி பரிசைக் கொடுப்பது போல நிவாரணம் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்திலேயே முதல் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கும் கோமாளித்தனமான ஒரே அரசு, தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவின் விடியா அரசு தான். நிர்வாகத் திறனற்ற முதல்வரின் தலைமையில் ஆட்சி நடக்கவில்லை. மாறாக இங்கே சர்க்கஸ் தான் நடக்கிறது என இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.