தமிழ்நாடு

திமுகவில் இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு: உதயநிதி இளைஞரணிச் செயலாளர்!

Published

on

திமுக தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் முன்னர் வகித்துவந்த திமுக இளைஞரணிச் செயலாளர் பதவி அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படால் என தகவல்கள் வருகின்றன. இது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவிலும் ஸ்டாலின் குடும்பத்திலும் குரல்கள் வலுவாக ஒலித்து வருகிறது. இதனால் திமுகவில் அடுத்த வாரிசுக்கான அரியாசனம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுகவுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து திமுகவில் உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை சமீப காலமாக எழுந்து வருகிறது.

மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் தனது மகன் உதயநிதிக்கு பதவி வழங்க ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனையடுத்து உதயநிதிக்கு ஸ்டாலின் முன்னதாக வகித்த இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவு நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

நாமக்கல் மேற்கு, நாமக்கல் கிழக்கு, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் திமுகவினர் உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி அளிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படக் கூடும் என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த அறிவிப்பு முன்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரபல ஜோதிடர் ஒருவரிடம் உதயநிதியின் ஜாதகத்தை கொடுத்து நல்ல நாள் பார்த்து இன்றுதான் அது கைகூடி வந்துள்ளதாகவும் பேசப்படுகிறது. வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version