தமிழ்நாடு

வைகோ வேட்புமனு நிராகரிப்பு? நான்காவது வேட்பாளரை களமிறக்கினார் மு.க.ஸ்டாலின்!

Published

on

தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாட்டாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோவை நான்காவது வேட்பாளராக திமுக சார்பில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கடந்த மக்களவை தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என திமுக உடன்படிக்கை செய்துகொண்டது. அதன்படி திமுக அளித்த ஒரு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பின் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராளுமன்றத்துக்கு செல்ல முயன்று வருகிறார்.

இந்நிலையில் வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததால் அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்பி ஆவதில் சிக்கல் ஏற்படுமா என குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் வைகோ தலைமைச் செயலகத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது மனுவை சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிடும் தகுதி உள்ளதா என்பது வருகிற ஜூலை 9-ஆம் தேதி தெரியவரும் என்றார். இந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதை தடுக்க சில அரசியல் சூழ்ச்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனையடுத்து வைகோவின் வேட்புமனு ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாட்டாக திமுக தனது வேட்பாளை களமிறக்கியுள்ளது. இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆலோசனை செய்தார். இதனையடுத்து மூத்த வழக்கறிஞர்களுடன் சென்று மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வைகோவின் வேட்புமனு ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்பட்டால், என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்வார். இந்த அரசியல் குழப்பத்துக்கு நாளை ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்.

seithichurul

Trending

Exit mobile version