தமிழ்நாடு
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ஐடி ரெய்டு: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வருமான வரி சோதனை நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை குலைக்கும் வகையில் பாஜக, வருமானவரித் துறை மூலம் பயமுறுத்துவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இன்று காலை முதல் திமுக பிரமுகர்களின் பல வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, திமுக அண்ணா நகர் வேட்பாளர் மோகன் வீடு, கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு ஆகிய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வருமான வரி சோதனை குறித்து திமுகவின் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் திமுகவை ஐடி ரெய்டு மூலம் பயமுறுத்த முடியாது என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது திமுக தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எந்த வித முகாந்திரமும் இல்லாமல் பாஜக அரசின் உந்துதல் காரணமாக தேர்தல் நடைபெறும் நேரத்தில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்றும், இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தனது புகாரில் தெரிவித்துள்ளது. இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.