தமிழ்நாடு
மு.க.அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி: சஸ்பெண்ட் செய்து தலைமை அதிரடி!
முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியை நேற்று சென்னை விமானநிலையத்திற்கு சென்று வரவேற்ற திமுக நிர்வாகி ரவியை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின்னர் அவரது மகன் மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரது விருப்பத்திற்கு மு.க.ஸ்டாலின் இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நாளை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதியை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்த அழகிரி அதில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார் மு.க.அழகிரி அவரை வேளச்சேரி கிழக்கு பகுதிச் செயலாளர் மு.ரவி விமானநிலையம் சென்று வரவேற்றார். இதற்காக அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பில், வேளச்சேரி கிழக்குப் பகுதிச் செயலாளர் மு.ரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.