தமிழ்நாடு
எஸ்.பி.வேலுமணியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்: திமுக சவால்!
![RSB and SPV - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/RSB-and-SPV.jpg)
உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க தயார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.
திமுக தரப்பு தன் மீது ஊழல் குற்றச்சாட்டு முன் வைத்துள்ள நிலையில், டெல்லியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்துவிட்டால், அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன் எனவும். அப்படி குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியைத் துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியைத் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தான் செய்த ஊழலை மறைப்பதற்கு வேலுமணி ஏதேதோ காரணங்களைக் கூறுகிறார். நான் அவரை சவாலுக்கு அழைக்கிறேன். வேலுமணி மீது சுமத்தப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் எங்கு வரச்சொல்கிறாரோ, அந்த இடத்தில் ஆதாரங்களோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன் என்றும் சவால் விடுத்தார்.