தமிழ்நாடு
ஹோட்டல் ஊழியரை தாக்கிய திமுகவினர்: இந்தமுறை சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டதால்!
திமுகவினர் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டதால் ஹோட்டல் ஊழியர்களை அவர்கள் தாக்கிய சம்பவம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை திமுகவை சேர்ந்த சிலர் சென்று வடை, பஜ்ஜி என ருசிக்க ருசிக்க சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பிட்டு முடிந்ததும் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டுள்ளார் அந்த ஹோட்டல் ஊழியர் முருகன் என்பவர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த திமுகவினர், நாங்க யார் தெரியுமா? என கேட்டு அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். மேலும் மீண்டும் இரவு 10 மணிக்கு திமுக முன்னாள் வட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான ரஜினி உட்பட சுமார் 10 பேர் வந்து ஹோட்டல் உரிமையாளரை அசிங்கமாகப் பேசியும். சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்ட ஊழியர் முருகனை அடித்து நொறுக்கியும் சென்றார்கள்.
இதனையடுத்து அந்த ஊழியர் முருகன் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் திமுகவினர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கால் சென்றபோது, அதனைத் தட்டிக்கேட்ட ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.