தமிழ்நாடு
ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் திமுகவும், காங்கிரசும் தான்: தம்பிதுரை ஆவேசம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தான் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறிவரும் நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திமுகவும், காங்கிரசும் தான் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என ஆவேசமாக கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை அப்பல்லோவில் செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் நிலவியதை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நேற்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் அவர் மீது திமுக தொடர்ந்த வழக்குதான். கலைஞரும், ஆர்.எஸ்.பாரதியும்தான் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளினார்கள். காங்கிரஸ் உடந்தையாக இருந்தது.
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது மிகவும் சிரமப்பட்டார். ஆனால் அப்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மேலும் வழக்கை எதிர்த்து மேல்முறையீட்டுக்கும் சென்றது. அந்த உளைச்சல் காரணமாகத்தான் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே ஜெயலலிதா மரணத்துக்கு முழுக் காரணமும் திமுகவும் காங்கிரஸும்தான் என்றார் தம்பிதுரை.