தமிழ்நாடு
துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிகவினர்: திமுகவினர் கூடியதால் பதற்றம்!
![DMDK - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/DMDK.jpg)
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மேகம் தற்போதே சூழ்ந்துள்ளது. கூட்டணி அமைப்பதில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தேமுதிகவின் நிலைமைதான் தற்போதுவரை ஒரு தெளிவில்லாமல் உள்ளது. சொல்லப்போனால் தேமுதிக பரிதாபமான நிலையில் உள்ளது. அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிவிட்டது அதன் கதை.
இந்நிலையில் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே திமுக உடன் தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக பொருளாளர் துரைமுருகன் ஊடகங்களுக்கு சொல்லி தேமுதிகவின் முகத்திரையை கிழித்துவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தேமுதிகவுக்கு பெருத்த அவமானமும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
திமுக தனது கூட்டணி கதவையும் மூடிவிட்டு, தேமுதிகவை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டதால் தற்போது தேமுதிகவுக்கு அதிமுகவை விட்டால் வேறு வழி இல்லை. இதனால் தேமுதிகவால் முன்புபோல் அதிமுகவிடம் அதிகாரம் செய்து சீட் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக கொடுப்பதை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது தேமுதிகவுக்கு. இந்நிலையில் தேமுதிகவை அவமானப்படுத்திய திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டை தேமுதிகவின் முயற்சி செய்துள்ளனர்.
காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட முயற்சி செய்த தேமுதிகவினர் துரைமுருகனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அந்த பகுதியில் திமுக தொண்டர்களும் கூடியதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.