தமிழ்நாடு
தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி!
தேமுதிக துணை பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இன்று மட்டும் இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் கொரோனா விதிமுறையை கடைபிடிக்காமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாகவும் இதனை அடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.