தமிழ்நாடு

பூரண நலமுடன் தமிழகம் திரும்பும் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாகம்!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனையடுத்து விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னையிலும், அமெரிக்காவிலும் மாறி மாறி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் மனைவி மற்றும் மகன் உடன் சென்றனர். தனது திருமணநாளை அமெரிக்காவிலேயே மனைவி பிரேமலதாவுடன் கொண்டாடிய விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டார்.

இதனையடுத்து மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை மைத்துனர் சுதீஷும், கட்சி செயல்பாடுகளை மகன் பிரபாகரனும் கவனித்து வந்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முழு உடல் நலத்துடன் சென்னை திரும்ப உள்ளார்.

நாளை மறுநாள் காலை 8.30 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் சென்னை திரும்புகிறார் என தேமுதிக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கியுள்ள வேளையில் விஜயகாந்தின் ரீஎண்ட்ரீ தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்திலும் நிச்சயம் திருப்புமுனையாக அமையும்.

Trending

Exit mobile version