தமிழ்நாடு
கூட்டணி முடிவாகும் முன்பே வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் தேமுதிக!
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கடந்த பல கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி கட்ட முடிவு எடுக்கப்படவில்லை. தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 15 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்றும் ராஜ்யசபா தொகுதியும் தர முடியாது என்று அதிமுக கறாராக சொல்லி விட்டதாக தெரிகிறது.
இதனால் தேமுதிக நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளது. விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்பட மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கும் இந்த அவசர ஆலோசனைக்குப் பின்னரே அதிமுக தொகுதிகளை வாங்கிக்கொண்டு தேமுதிக கூட்டணியில் இணையுமா? அல்லது அதிரடி முடிவை எடுக்குமா என்பது தெரியவரும்.
இந்த நிலையில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்காத நிலையில் அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தேமுதிக தலைமை தகவல் தெரிவித்துள்ளது. தேமுதிக வேட்பாளர் பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தேமுதிக விருப்பமனு பட்டியலை வாங்கியது என்பதும் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது சமீபத்தில் அறிவித்திருந்தது என்பதும் தெரிந்ததே.