சினிமா
குரலற்றவர்களின் குரல்.. ஜெய்பீம் படத்தை பாராட்டிய ஷங்கர்…
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், இப்படத்தை பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் தோன்றும் இன்ஸ்பெக்டர் கேரக்டர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் போன்றும் வன்னியர் சமுதாயம் என்றாலே வன்முறையாளர்கள் என்பது போன்றும் ’ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு மிரட்டும் தொனியில் ஒரு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யாவும், பின்னர் அப்பட இயக்குனர் ஞானவேல் என இருவரும் விளக்கமளித்தனர். தற்போது அந்த பிரச்சனை கொஞ்சம் ஓய்ந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தை பிரம்மாண்ட பட இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் பார்த்துள்ளார். இப்படம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ‘ ஜெய்பீம் படம் குரலற்றவர்களுக்கான குரல், இயக்குனரின் எதார்த்தமான அணுகுமுறை பாராட்டுக்குரியது. நடிப்பை தாண்டி சமூகத்தின் மீது சூர்யா காட்டும் கருணை பாராட்டத்தக்கது. சக்தி வாய்ந்த படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என மீண்டும் நிரூபணமாகியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.