சினிமா
ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் சக்தி சிதம்பரம் போலீசில் புகார்!
தமிழ்த் திரைப்படங்கள் குறித்து யூ டியூப் இணையதளத்தில் விமர்சனம் செய்துவரும் ப்ளூ சட்டை மாறன் மீது பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
டி.சிவா தயாரிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கிய சார்லி சாப்ளின் 2 படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது. பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்தை யூ டியூப் தளத்தில் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதில், நான் 25 ஆண்டுகளாக பல படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறேன். என்னுடைய இயக்கத்தில் கடந்த 25-ம் தேதி வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தை ப்ளூ சட்டை மாறன் மிக தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்துள்ளார். இதனையடுத்து நான் ப்ளூ சட்டை மாறனிடம் அலைபேசியில், ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை உள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர் உட்பட படத்தின் ஒட்டு மொத்த குழுவையும் ஒருமையில் கேவலமாக பேசியதையும் கடும் சொற்களை உபயோகப்படுத்தியதையும் வாபஸ் பெற வேண்டும் என்று நாகரிகமாகக் கேட்டேன்.
ஆனால் அவர் இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறேன். எனக்கு லாபம் கிடைக்க என்ன வேணும்னாலும் பண்ணுவேன் உன்னால் முடிஞ்சா பாத்துக்கோ என மோசமான வார்த்தைகளில் பேசினார். மேலும் என்னை காலிபண்ணிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சக்தி சிதம்பரம், தவறான விமர்சனம் குறித்து கேட்ட போது அதை நீக்குவதற்கு எனக்கு என்ன தருவீர்கள் என்ன கிடைக்கும் என ப்ளூ சட்டை மாறன் கூறினார். இது போன்று தொடர்ந்து பணம் பிடுங்கும் நோக்கில் தவறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதுகுறித்த ஆதாரங்களை கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். விரைவில் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவர் மீது புகார் கொடுப்பார்கள் என்றார்.