தமிழ்நாடு

கைது பயம்: முன் ஜாமீன் கேட்கும் பா.ரஞ்சித்!

Published

on

மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்க இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன் என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இவ்வாறு பேசியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும் விவாதத்தையும் இது ஏற்படுத்தியது. இதனையடுத்து பா.ரஞ்சித்துக்கு எதிராக ஒரு தரப்பும், எதிராக ஒரு தரப்பும் விவாதம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா தாமாக முன்வந்து இந்த வழக்குகளை பதிவு செய்துள்ளார்.

இதனால் பா.ரஞ்சித் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இயக்குநர் பா.ரஞ்சித் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடமும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நானும் குறிப்பிட்டேன். எனது பேச்சு சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். ஆகவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் திருவாய்ப்பாடி பகுதியில், பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்த திருப்பனந்தாள் காவல் துறையினரை கண்டிக்கும் வகையில் நீலப்புலிகள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போலீசார் செயல்படுவதாகவும், பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

seithichurul

Trending

Exit mobile version