தமிழ்நாடு
திண்டுக்கல் ஐ லியோனிக்கு முக்கிய பதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக புதிய தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை தயாரித்து விநியோகம் செய்வதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இந்த கழகத்தின் மூலமாக அச்சிடப்பட கூடிய பாடநூல்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திலும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்கள், சிறுபான்மை மொழிப் பாட நூல்கள், மேல்நிலைப்பள்ளி தொழிற்நுட்ப பாட நூல்கள், ஆசிரியர் பயிற்சிக்கான பாட புத்தகங்கள் மற்றும் கல்லூரிக்கான பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை பணியை செய்து கொண்டிருக்கும் ஒரு துறை ஆகும்.
இந்த முக்கிய பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்வதற்காக தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமனம் செய்யப்படுவதாக முதலமைச்சர் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இவர் நாளை முதல்வரை சந்தித்து அதன்பின் இந்த பதவியை ஏற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல் ஐ லியோனி சிறந்த ஆசிரியராகவும், மேடைப்பேச்சாளராகவும், இலக்கியச் சொற்பொழிவாளராகவும், நகைச்சுவை பட்டிமன்ற நடுவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 2010ஆம் ஆண்டு கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் திண்டுக்கல் ஐ லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தினுடைய புதிய தலைவராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.