தமிழ்நாடு
என்ன ஆச்சு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு: தொடரும் உளரல் பேச்சுக்கள்!
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்ன ஆச்சு, ஏதாவது பிரச்சனையா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவரது உளரல் பேச்சுக்கள் தொடர்ந்தவாறே இருக்கின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தற்போது வாஜ்பாய் அறிவித்துள்ள பட்ஜெட் அருமையாக உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பளித்துள்ளார் என்று பேசினார்.
சமீப காலமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நடந்த அரசு விழாவில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லிக்கு போய் பிரதமர் நரசிம்ம ராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார்.
இதேபோல பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன் சிங்கை பிரதமர் எனவும், பாரத ரத்னா எம்ஜிஆர் என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்ஜிஆர் எனவும் பேசி கிண்டல்களுக்கு ஆளாகினார். தற்போது பியூஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையை வாஜ்பாய் பட்ஜெட் என்று பேசியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.