தமிழ்நாடு
‘அதிமுக சொன்ன தேர்தல் வாக்குறுதிய ஏன் நிறைவேத்தல..?’- திண்டுக்கல் சீனிவாசனை மடக்கிய நிருபர்கள்
அதிமுக சார்பில் இன்று மாவட்ட வாரியாக திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார்.
போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘திமுக அரசு, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு இருந்த போது, அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டன.
மக்களுக்குப் பொங்கல் பணம் கொடுக்கப்பட்டது. அதைப் போல அடுத்தடுத்து நிதியுதவிகள் கிடைத்தன. ஆனால், திமுக கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத காரணத்தினால் தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்’ என்றார்.
அப்போது ஒரு நிருபர், ‘அதிமுக அரசு, சென்ற தேர்தல் அறிக்கையில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக செல்போன் வழங்கப்படும் என்றது. அதற்கான நடவடிக்கை ஏதும் இல்லையே’ என்று கேட்டார்.
அதற்கு சீனிவாசன், ‘தமிழகத்தைப் பொறுத்தவரை 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்களிடம் செல்போன் உள்ளது. எனவே தான் அப்படியான திட்டம் தேவையில்லை என்று கைவிட்டு விட்டோம்’ என்று கூறினார்.