தமிழ்நாடு
‘கொடுக்குற 2,500 ரூபாய், டாஸ்மாக் வழியா திரும்ப அரசுக்கே வரும்!’- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில வாரங்களுக்கு முன்னர், ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்போடு 2,500 ரூபாய் பணமும் கொடுக்கப்படும்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், இன்று முதல் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொங்கல் பரசித் தொகுப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மது போதையில் இருந்த ஒருவர், ‘தலிவரே எனக்கு இன்னும் அரசு சொன்ன 2,500 ரூபா வரலீங்க’ என்றுள்ளார்.
அதற்கு அமைச்சர் சீனிவாசன், ‘கண்டிப்பாக எல்லோருக்கும் அந்த நலத் திட்டம் வந்து சேரும். மக்களின் பணம், மக்கள் கைகளுக்கே வந்து சேர வேண்டும் என்னும் நோக்கில்தான் இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில் இவரைப் போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் பணம், டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசாங்கத்துக்கே வந்து சேரும்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அமைச்சர் இப்படி பேசியதால் அருகில் இருந்தவர்களும் கைதட்டி சிரித்தனர்.