தமிழ்நாடு
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை; வெவ்வேறு சின்னத்தில் நின்றாலும் வெற்றிபெறுவோம்: தினகரன் அதிரடி!
டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்ட அமமுக இந்த தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது. எஸ்டிபிஐ கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் பணிமனைகளையும் திறந்து தேர்தல் வேலைகளில் தீவிராமக களமிறங்கியுள்ளது அமமுக.
ஆனால் அமமுக கட்சி வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பது தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது. குக்கர் சின்னத்தை கேட்டு கடுமையான சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் டிடிவி தினகரன். ஆனால் தேர்தல் ஆணையம் குக்கரை தினகரன் தரப்புக்கு ஒதுக்க முடியாது என தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த விவகாரத்தில் வரும் 25-ஆம் தேதி விசாரணை வர உள்ளது. அப்போது ஒரு முடிவு தெரிந்துவிடும் என நம்பிக்கையில் உள்ளனர் அமமுகவினர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் சின்னம் தொடர்பாக பேசினார். குக்கர் சின்னம் கேட்டு நாங்கள் தொடர்ந்த வழக்கு வரும் 25-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது எந்த சின்னம் என்ற முடிவு தெரிந்துவிடும். அதற்கு அடுத்த நாள் நாங்கள் மனுதாக்கல் செய்வோம் என்றார்.
மேலும், தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீதிமன்றத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லையெனில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் என ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு சின்னத்தில் நின்றால் கூட இவர் அமமுக வேட்பாளர் என்று மக்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்கள் எங்களுக்கு வெற்றியைத் தருவார்கள் என்றார் அதிரடியாக.