தமிழ்நாடு
பாம்பின் கால் பாம்பிற்கு தெரியும்; ஸ்டாலினிடம் கேளுங்கள்: தினகரன் அதிரடி!
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை மூன்று மாவட்டங்களை பிரித்துள்ளார். விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை பிரித்துள்ளார்.
இந்த மாவட்டங்களை பிரித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லஞ்ச, லாவண்யத்தை மறைக்கத்தான் மாவட்டங்களை பிரிக்கிறார்கள் என விமர்சித்தார். இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். தேர்தல் தோல்விக்கு பின்னர் வேலூர் தேர்தலில் போட்டியிடாத தினகரன் கட்சியை பதிவு செய்த பின்னர் தேர்தலில் போட்டியிடுவோம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், கட்சியை பதிவு செய்யும் பணியில் இருப்பதால் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்த பின்னர் நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் அமமுக போட்டியிடும் என்றார். மேலும் லஞ்ச, லாவண்யத்தை மறைக்கத்தான் மாவட்டங்களை பிரிக்கிறார்கள் என்று ஸ்டாலின் சொன்னதாக சொல்கிறார்கள். பாம்பின் கால் பாம்பிற்கு தெரியும். அதனால் அதுகுறித்து ஸ்டாலினிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார் அதிரடியாக.