தமிழ்நாடு
பாஜகவை தொடர்ந்து தைரியமாக எதிர்ப்பேன்: தினகரன் அதிரடி!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவை கடுமையாக விமர்சித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் தோல்வியால் பாஜகவுடன் சமரசமாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவை தொடர்ந்து தைரியமாக எதிர்ப்பேன் என மறைமுகமாக கூறியுள்ளார் தினகரன்.
மக்களவை தேர்தலின் போது அமமுகவுடன் கூட்டணி வைத்த எஸ்டிபிஐ கட்சியின் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார் தினகரன். அப்போது, தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழர்களின் உரிமைக்காக, பாதுகாப்புக்காக எப்படி நமது சகோதரர் திருமுருகன் காந்தி போன்றவர்கள், பெரியவர் பழ நெடுமாறன் போன்றவர்கள் தேர்தல், சுயநலம் எதிர்பார்க்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதுபோல, இதுபோன்ற நண்பர்களுடன் அமமுக அரசியலைத் தாண்டி தமிழக நலனுக்காக தமிழக பாதுகாப்புக்காக, தைரியமாக எந்த ஒரு சக்தியையும், அது யாராக இருந்தாலும் சிறிதும் பின்வாங்காமல், எதிர்த்துப் போராடுவோம் என்றார்.
மேலும், தமிழகத்தின் நலனை மாத்திரம் நலனில் கொண்டு, தமிழ்நாட்டில் எந்த வித மதவாதமும் தலை தூக்க விடாமல், சகோதர சகோதரிகளாக சாதி மத பேதமற்ற தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற அமமுக என்றும் துணிச்சலுடன் போராடும் என்றார். இந்த விழாவில் திருமுருகன் காந்தி, பழ நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.