தமிழ்நாடு
மு.க.ஸ்டாலினை தொடர்ந்து கிரண் பேடியை விளாசிய டிடிவி தினகரன்!
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி சர்ச்சைக்குறிய வார்த்தைகளை பயன்படுத்தியது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் வறட்சிக்குக் காரணம் மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியம். அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும்கூட காரணமாக உள்ளது என தமிழக மக்களை கிரண் பேடி கோழைகள் என மோசமாக விமர்சித்திருந்தார்.
இது நேற்று தமிழக சட்டசபையில் நேற்று எதிரொலித்தது. திமுகவினர் கிரண் பேடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுவை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். அவரை உடனடியாக ஆளுநர் பதவியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மேலும் புதுவை திமுகவினர் ஆளுநர் கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.
அப்படி ஏதாவது கேட்க நினைத்தால் அவர் பதிவிட்டுள்ளபடிநிர்வாக திறனற்ற இந்த ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருபவர்களிடம் கேள்வி கேட்கட்டும். அம்மா என்கிற இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகத்தை பிறர் கேலி பேசுகிற நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் ஆளாக்கிவிட்டது வேதனை அளிக்கிறது என்றார்.