தமிழ்நாடு
தினகரனால் அமமுகவை நடத்த முடியாது, அந்த கட்சி கல்லறைக்கு போய்விடும்: நாஞ்சில் சம்பத் ஆவேசம்!
![Nanjil Sampath - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Nanjil-Sampath.jpg)
அமமுக பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தினகரனால் அமமுகவை நடத்த முடியாது என அந்த கட்சியில் இருந்து முதல் ஆளாக விலகிய நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், அதிமுகவை பாஜக இயக்குவதால் தன்மானத்தை இழந்து அதிமுகவில் இணையவில்லை. அமமுக நிர்வாகிகள் பலர் திமுகவுக்கு வருவார்கள். தேனியில் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், அமமுக பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. அழிவின் விளிம்பில் நிற்கிறது. அதனுடைய அழிவை யார் நினைத்தாலும் இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது. கொள்கை சார்ந்த அமைப்பாக அதனை கட்டி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சியினுடைய தலைமை இதுவரைக்கும் சிந்திக்கவில்லை.
ஒரு மிகப்பெரிய தோல்வியை தமிழ்நாட்டில் பெற்ற பின்னரும் இந்த தோல்விக்கான காரணம் என்னவென்று இதுவரைக்கும் அவர் யோசிக்கவில்லை. டிடிவி தினகரனால் அமமுகவை நடத்துவதற்கு முடியாது. காலப்போக்கில் அந்த கட்சி கல்லறைக்கு போய்விடும் என கடுமையாக விமர்சித்தார்.